சாமிமலை முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடி: மஸ்கேலியா பிரதேச சபைக்கு அவசர கோரிக்கை!
: சாமிமலை நகரில் அதிகரித்து வரும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசல் மற்றும் பகுதிநேர சாரதிகளின் வருகை காரணமாக தங்களது அன்றாட வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சாமிமலை பகுதி முச்சக்கர வண்டி சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மஸ்கேலியா பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு சாமிமலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினரால் கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சாமிமலை பகுதியில் பெருமளவிலான குடும்பங்கள் முச்சக்கர வண்டி தொழிலையே முழுமையான வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. எனினும், தற்போது வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் மாலை நேரங்களில் பகுதிநேரமாக முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடுவதனாலும், வெளிப்பகுதிகளில் இருந்து வரும் நபர்கள் குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்குவதனாலும், இந்தத் தொழிலை மாத்திரம் நம்பியிருக்கும் நிரந்தர சாரதிகளின் அன்றாட வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, சாமிமலை நகரில் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளமையினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முறையான வாகன நிறுத்துமிடம் (Parking Zone) இன்மையால், வர்த்தக நிலையங்களின் முன்பாகவும், பிரதான வீதி ஓரங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் நகருக்குள் வரும் சிறிய ரக வாகனங்கள் மற்றும் லாரிகள் பயணிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகாணும் முகமாக மஸ்கேலியா பிரதேச சபையிடம் சாரதிகள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:
சாமிமலை நகரில் முச்சக்கர வண்டிகளுக்கென முறையான, நிரந்தர வாகன நிறுத்துமிட வசதியை (Parking Zone) ஏற்படுத்தித்தரல்.
வீதியோரங்களில் ஒழுங்கற்ற முறையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
இந்தத் தொழிலை மாத்திரம் நம்பி வாழும் சாரதிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தகுந்த ஒழுங்குமுறைகளை உருவாக்குதல்.
சாமிமலை நகரத்தை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, அழகான நகரமாக மாற்றுவதற்கும், சாரதிகள் மற்றும் வர்த்தகர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
S.அஜித்
