பண்டாரவளை, பிதுனுவெவ பகுதியில் மசாஜ் நிலையம் (Massage Parlour) என்ற பெயரில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை, பண்டாரவளை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் அதிரடியாகச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர். கடந்த 22ஆம் திகதி இரவு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, வியூகம் வகுத்த பொலிஸார், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை வாடிக்கையாளர் போல் அனுப்பி இந்தச் சுற்றிவளைப்பை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
இந்த முற்றுகையின் போது அங்கிருந்த மூன்று பெண்களும், அந்த விடுதியை நடாத்தி வந்த முகாமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்கள் பண்டாரவளை, இரத்தினபுரி மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் 35 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் தற்சமயம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
