நாட்டில் தற்போது நிலவும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொட்டகலை பிரதேச சபையினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக, டெங்கு ஒழிப்பு வாரம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், டெங்கு ஒழிப்பு வாரத்தின் முக்கியத்துவம் மற்றும் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது இராஜமணி பிரசாந்த் தலைவர், கொட்டகலை பிரதேச சபை,சுதர்ஷன் – பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH), கொட்டகலை,.தேவன் – பொது சுகாதாரப் பரிசோதகர் (PHI)வி. விஜேசுந்தரம் – செயலாளர், கொட்டகலை பிரதேச சபை,R.M.D.P. ராஜகருணா – சுற்றாடல் அதிகாரி, கொட்டகலை பிரதேச சபை ஆகியோர் கலந்துகொண்டர்.
இந்தக் கலந்துரையாடலின் முக்கிய தீர்மானமாக, எதிர்வரும் 20.06.2026 அன்று கொட்டகலை நகரப் பிரதேசத்தில் விசேட டெங்கு பரிசோதனை நிகழ்வை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நாளில், நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதேச சபை அதிகாரிகள், பொதுமக்கள் தத்தமது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் டெங்கு நுளம்புகள் பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்குமாறும், பொது சுகாதாரப் பிரிவினரின் பணிப்புறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
