சுமார் 109.9 மில்லியன் ரூபாய் (110 மில்லியன்) சந்தைப் பெறுமதியுடைய கொக்கைன் போதைப்பொருளை நுட்பமான முறையில் கடத்தி வர முயன்ற 79 வயதான ஸ்பெயின் நாட்டுப் பிரஜை ஒருவரை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் ஒரு விவசாயப் பொறியியலாளர் (Agricultural Engineer) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடந்த 22ஆம் திகதி சியரா லியோனிலிருந்து (Sierra Leone), அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாகக் கட்டார் எயார்வேஸ் (QR654) விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளார். இவர் கைவசம் வைத்திருந்த பயணப் பையைச் சுங்க அதிகாரிகள் ஆரம்பத்தில் பரிசோதித்தபோது சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.எனினும், அவரது மற்றொரு பயணப் பை அதே விமானத்தில் வராததால், அவர் வழமையான வருகைப் பதிவை முடித்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். பின்னர் இலங்கைக்கு வந்தடைந்த அந்தப் பையைப் பொறுப்பேற்பதற்காக, சந்தேகநபர் நேற்று (24) மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அந்தப் பையை எக்ஸ்-ரே (X-Ray) பரிசோதனைக்கு உட்படுத்திய சுங்க அதிகாரிகள், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளைக் கண்டுபிடித்தனர்.
பயணப் பையிலிருந்த இரு கோப்பு தாங்கிகளுக்குள் (File Holders) மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கொக்கைன் பொதிகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் எடை: 2.198 கிலோகிராம்,சந்தைப் பெறுமதி: சுமார் 109.9 மில்லியன் ரூபாய்.
இச்சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்பெயின் பிரஜையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் (PAB) ஒப்படைக்கப்படவுள்ளன.
