மலையக வரலாற்றின் தனியான தோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை– முன்னாள் எம்பி திலகர் இரங்கல்
தோட்டத் தொழிலாளியாக வேலை செய்து தொழிற்சங்க, அரசியல், இலக்கிய தளத்தில் மேலெழுந்து வந்த தொழிற்சங்க அரசியல்வாதியான தவசி அய்யாத்துரை,
மாத்தளை ரோகிணி’ எனும் பெயரில் எழுதியுள்ள மலையகத்தில் உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் குறித்த ஆய்வுப் பதிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இவரது இந்த பணி மலையக வரலாற்றின் தனியான அத்தியாயமாகும். அதற்காகவே அவரது பெயர் வரலாற்றில் நிலைபெறும். அன்னாருக்கு அரங்கத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த அஞ்சலிகளைப் பதிவு செய்கிறேன் என மலையக அரசியல் அரங்கத்தின் செயல்திபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
முன்னாள் தோழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினரும் எழுத்தாளருமான தவசி அய்யாத்துரை யின் மறைவினை அடுத்து விடுத்திருக்கும் இரங்கல் செய்தியிலேயே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் தொழிற்சங்கம் சார் அரசியல் கலாசாரத்துக்கு தனியானதோர் இடமுண்டு. அதில் தோட்டத் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு தொழிற்சங்கத்தின் தலைவராக நீண்டகாலம் இயங்கிய, மாகாண சபை உறுப்பினராகவும் விளங்கிய பெருமை தவசி அய்யாத்துரை அவர்களுக்குரியது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நெடுநாள் தலைவராக இயங்கிய இவர் பின்னாளில் ஐக்கிய தொழிலாளர் சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது தொழிற்சங்க பயணத்தைத் தொடர்ந்தாலும் தொழிலாளர் தேசிய சங்கமே இவருக்கான அடையாளமாகத் திகழ்கிறது.
இவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில் உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் மாணவனாக இவருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அன்று முதல் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கும் எனக்குமான தொடர்புகள் ஆரம்பித்தன. எங்கள் அந்த ஆரம்ப கால நட்பின் அடையாளமே மக்கள் கவிமணி சி.வி வேலுப்பிள்ளை யின் “இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே” நெடுங்கவிதையின் இரண்டாம் பதிப்பாகும்.
2000 ஆம் ஆண்டில் நண்பர்கள் நாங்கள் இணைந்து உருவாக்கிய மலையக தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் அய்யாத்துரை அவர்களையே நியமித்தோம். மல்லியப்புசந்தியில் இடம்பெற்ற சத்தியாகிரக போராட்டத்தோடு அந்த கூட்டமைப்பு சிதைந்து போனது.
மாத்தளை ரோகிணி எனும் பெயரில் பத்திரிகைகளில் தொடர்கதைகள் (நாவல்), அரசியல், தொழிற்சங்க கட்டுரைகளை என இலக்கிய பரப்பிலும் எழுதி வந்தவரின்
‘ உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்’ எனும் மலையகத் தியாகிகள் குறித்த ஆய்வு கட்டுரை இவரை வரலாற்று நாயகர்களில் ஒருவராக மலையகத்தில் நிலைக்கச் செய்கிறது.
அன்னாரின் குடும்பத்தாரின் துயரில் நானும் பங்கேற்பதோடு அன்னாருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளையும் தெரிவிக்கிறேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
