நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழை மற்றும் கடும் காற்று காரணமாக, இரண்டு வெவ்வேறு தோட்டப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் இடர் நிலவரங்களால் 55 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்திற்கு சொந்தமான பிலக்வாட்டர கெனில் வத்த பகுதியில், இரவு முழுவதும் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 26 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர், இன்று (3ஆம் திகதி) அதிகாலை வேளையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உரித்தான மேபில்ட் தோட்டத்தின் ரொப்கீல் பிரிவில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, 30 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான காலப்பகுதியில் பதிவான மழை வீழ்ச்சி விவரங்களை காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய,
கங்க இகல கோரலை பகுதியில் 196.6 மில்லிமீற்றர் மழையும்,
கிரிவன்னெளிய பகுதியில் 184.2 மில்லிமீற்றர் மழையும்,
அரநாயக்க பகுதியில் 182.6 மில்லிமீற்றர் மழையும்,
வட்டவளை பகுதியில் 163.2 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து நிலவிவரும் கடும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி -பெருமாள்
