நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு.
இன்று நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நுவரெலியா நகரை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியான மழை காரணமாக பல இடங்களில் சிறிய மண் சரிவுகளும், மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு, வலயத்திற்குட்பட்ட பெரும்பாலான தமிழ் மொழி பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேவேளை, பெரும்பாலான சிங்கள மொழி பாடசாலைகள் வழக்கம்போல் இயங்கின.
எனினும், சில பாடசாலைகளில் விடுமுறை தொடர்பான அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உரிய நேரத்தில் சென்றடையாததால், பல மாணவர்கள் வழக்கம்போல் பாடசாலைக்கு வந்து பின்னர் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்காலத்தில் அவசர அறிவிப்புகள் விரைவாகவும் துல்லியமாகவும் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
