ஹெட்டன், கினிகத்தேனை – பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினாலேயே இந்தத் துயரச் அசம்பாவிதம் சம்பவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல் போயிருந்தனர். அவர்களைத் தேடும் நோக்கில் பொலிஸார், பாதுகாப்புப் பகுதியினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களின் ஊடாக மேலும் இரண்டு பெண்களினதும், ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொல்பிட்டிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர் மழைக் காரணமாகப் பிராந்தியத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதால், மலையகப் பகுதி மக்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரும் பொலிஸாரும் தொடர்ந்தும் எச்சரித்துள்ளனர்.
