பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மீட்பு
கல்கிசைப் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து, ஒரு கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த இரு பிரதான சந்தேக நபர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாகக் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இச்சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சந்தேக நபர்கள் தெகிவளைப் பகுதியிலும், அவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றுமொரு பெண்ணும் ஆணும் ஹட்டன் – பத்தனைப் பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, கொள்ளையடிக்கப்பட்ட எட்டு ஜோடி தங்கத் தோடுகள், நான்கு தங்கப் பதக்கங்கள், ஒரு தங்கக் காப்பு, பத்து தங்க மாலைகள், ஒரு கைச்சங்கிலி மற்றும் இரண்டு தங்க மோதிரங்கள் உள்ளிட்ட தங்க நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட அனைத்து நகைகளும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் 28 மற்றும் 46 வயதுடையவர்கள் ஆவர். அவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்டவர்கள் 28 வயதுடைய ஆணும் 53 வயதுடைய பெண்ணும் என்பதுடன், இவர்கள் அனைவரும் ஹட்டன் – பத்தனைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
– மஸ்கெலியா நிருபர்.
