சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கு “வேர்ல்ட் விஷன்” பாடசாலை -கொட்டகலை பிரதேச சபை அமர்வில் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு
அண்மையில் மழை வெள்ளம் மற்றும் சீரற்ற கால நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிவாரணம் கிடைக்கவுள்ளதாகவும், கொட்டகலை பிரதேசத்தில் விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கு “வேர்ல்ட் விஷன்” நிறுவனம் பாடசாலை ஒன்றை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் (11) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசுகையில் தெரிவித்தார்.
சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அண்மையில் மறைந்த கொட்டகலை பௌத்த விகாராதிபதிக்கு ஒருநிமிட மௌனாஞ்சலி செலுத்தபப்ட்டது. டெரிகிளையர் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சபை நிகழ்வுகளைக் காண ஆசிரியர்களுடன் வருகை தந்திருந்தார்கள்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
கடந்த வாரம் கண்டி இந்திய உதவித் தூதுவர் சரண்யா அம்மையாரை எமது செயலாளர் விஜயசுந்தரம், உறுப்பினர் பாஸ்கரன் சகிதம் சந்தித்து அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறும், க.பொ.த. சாதாரண தரம், உயர்தரத்தில் சித்தியடைந்த சுமார் 700 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மடி கணிணிகள், புலமைப் பரிசில் உட்பட இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பு மற்றும் விவசாய ஊக்குவிப்புக்கான உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். இன்னும் மூன்று மாத காலத்தில் உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளார். அவருக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட விஷேட தேவையுடைய பிள்ளைகள் கல்வி கற்கக் கூடிய பாடசாலை ஒன்றை கட்டிக் கொடுக்கவும், அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், உணவு, உடை, ஆசிரியர்கள் கொடுப்பனவு போன்ற செலவுகளை ஏற்றுக் கொள்ளவும் “வேர்ல்ட் விஷன்” நிறுவனம் முன்வந்துள்ளது. இதுவரை இனங்காணப்பட்டுள்ள விஷேட தேவையுடைய 88 மாணவர்களுக்கு 2026 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இரண்டு இலட்ச ரூபாவுக்கு உலர் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று விநியோகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, கொட்டகலை பொது விளையாட்டு மைதானம் மாதத்தில் 30 நாட்களும் விளையாடுவற்கு முன்பதிவு செய்யபப்ட்டு வருகின்றது. உள்ளூர் கழகங்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாவோடு வைப்புப் பணமாக 10 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படும். வெளியிடங்களில் உள்ள கழகங்களுக்கு வைப்புப் பணம் 10 ஆயிரத்தோடு நாளொன்றுக்கு 15 ஆயிரம் அறவிடவும், எமது பிரதேச எல்லைக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளுக்கு இலவசமாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
எமது பிரதேச சபைக்குச் சொந்தமான புதிய கட்டிடத்தின் வேலைகளை விரைவில் பூர்த்தி செய்ய மத்திய மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர், செயலாளர்களின் ஒப்புதலையும் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உறுப்பினர் சுதர்ஷன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வட்டகொடை நகரில் ATM இயந்திரத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக பிரபல வங்கிகளுடன் தோடர்பு கொள்ளப்பட்டு அதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
எமது உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அவரவர் வட்டாரங்களில் அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்து நவம்பர் மாத இறுதிக்குள் விபரங்களை சமர்ப்பித்து, ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச் செல்லாமலிருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
