கொழும்பு – பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர், கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையின் போது, இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக, கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் போதைப்பொருள் தொகுதியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) அழைப்பு மூலம் வழங்கிய தகவலுக்கமையவே தான் போதைப்பொருளைச் சேகரித்ததாகவும், அதனை வனத்த வீதியில் உள்ள பிறிதொரு நபரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கைது செய்யப்பட்ட அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்புச் நடவடிக்கையின் போதே, குறித்த போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
