‘யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.
(மின்மினி மின்ஹா – சம்மாந்துறை செய்தியாளர்)
சம்மாந்துறையில் ‘யாவருக்கும் உறையுள்’ எனும் தொனிப்பொருளில் OCD அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட 16ஆவது வீடு பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளருமான அல் ஹாஜ் ஜ.எல்.எம். மாஹிர் மற்றும் OCD அமைப்பின் தலைவரும் விஞ்ஞான முதுமானியும் சமூக சேவையாளருமான அஸ்மி யாசின் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அஸ்மி யாசின், பின்தங்கிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சமூக ஒற்றுமையும் கூட்டு முயற்சியும் அவசியம் எனத் தெரிவித்தார்.
தனிநபர் முயற்சிகளைக் காட்டிலும் சமூகத்தின் கூட்டு பங்களிப்பும், பரஸ்பர ஒத்துழைப்பும் தொடர்ச்சியான மக்கள் நலப் பணிகளுக்கு வலுசேர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வீடமைப்பு உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேலும் பல மக்கள் நலப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். ஜிப்ரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளர் எம்.எம்.ஏ. காதர், தவிசாளர் மாஹிரின் ஒருங்கிணைப்பாளர்களான மௌலவி அப்துல் முனாப்(ஆசிரியர்), வை.பீ.எம். ஜலீல், எம்.ரி.எம். பாயிஸ், ஏ.பி. பௌசான் உள்ளிட்டோரும், OCD அமைப்பின் உயர்பீட உறுப்பினர்க ளும், சமூக சேவையாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
