வட்டவளை பொலிஸாரின் அதிவிரைவு நடவடிக்கையால், அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில், வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 மற்றும் 8 இல் கல்வி பயிலும் இரு மாணவர்களும், 35 வயதுடைய ஆண் ஒருவரும் விறகு சேகரிப்பதற்காக மரத்தில் ஏறியுள்ளனர். அப்போது அவர்கள் வெட்டிய கிளை, மரத்திற்கு மேலாகச் சென்ற 33,000 வோல்டேஜ் அதி உயர் மின்சாரக் கம்பியின் மீது வீழ்ந்ததில் மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள், அப்பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் சஞ்சீவ என்பவருக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளனர். அவர் உடனே செயற்பட்டு, வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சந்தன கமகே அவர்களுக்கு அறிவித்தார்.
சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நோட்டன் பிரிட்ஜ் மின்சார அதிகாரியைத் தொடர்புகொண்டு உடனடியாக அப்பகுதிக்கான உயர் மின்சார விநியோகத்தைத் துண்டிக்க நடவடிக்கை எடுத்தார். மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் மூவரையும் மீட்டு வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இச்சம்பவத்தில் ஒரு மாணவனுக்கு உடலின் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றொரு மாணவர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மூவருக்கும் உயிர் ஆபத்து எதுவுமில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
