நுகர்வோரைத் திசைதிருப்பும் வகையில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போதே இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 2026/04/16 எனக் காலாவதித் திகதியிடப்பட்ட ஸ்ட்ராபெரி சுவையூட்டப்பட்ட கிரீம் பன்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தொடரப்பட்ட வழக்கு நேற்று (09) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனம் தம்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டது.
இதனையடுத்தே பிரதான நீதவான் குறித்த நிறுவனத்திற்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
நுகர்வோருக்கான விசேட அறிவித்தல்:
உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதிகளை முறையாகச் சரிபார்ப்பது நுகர்வோரின் பொறுப்பாகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இதுபோன்று சட்டவிரோதமான முறையில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
