2023 மார்ச் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் மீனவர்கள் மற்றும் மதகுருமார்கள் உட்பட கிட்டத்தட்ட 2500 இந்திய யாத்திரிகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வருடாந்தம் நடைபெறும் இத்திருவிழாவில் கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான இலங்கை யாத்திரிகர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக 2023 மார்ச் மூன்றாம் திகதி கச்சதீவினை வந்தடைந்த யாத்திரிகர்களை கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்றார். அன்றைய தினம் இத்திருவிழாவினை முன்னிட்டு விசேட பிரார்த்தனைகளும் மாலை நேர திருப்பலியும் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 2023 மார்ச் 04ஆம் திகதி இந்திய மற்றும் இலங்கை பாதிரியார்களால் மீனவர்களின் இரட்சகரான பதுவா புனித அந்தோனியாருக்காக விசேட திருப்பலி நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து பாரம்பரிய திருவிழா இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பெருவிழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் இந்திய இலங்கை யாத்திகர்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கான அல்லது காட்சிப்படுத்துவதற்கான கூடங்களும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
இவ்வருடத்தின் திருவிழாவுக்கு இந்திய அரசாங்கம் நிதி ஆதரவினை வழங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கொன்சூல் ஜெனரல் ராகேஷ் நட்ராஜ் மற்றும் கொன்சுலேட் அலுவலக அதிகாரிகள் இவ்விழாவிற்காக விசேட விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த வருடாந்த திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் இந்திய யாத்திரிகர்கள் மிகுந்த உத்வேகத்துடன் கலந்துகொள்கின்றனர். கடந்த இரு வருடங்களாக கொவிட் 19 காரணமாக இத்திருவிழா ஏற்பாடுகளிலும் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன. இத்திருவிழாவின் மூலமாக இந்திய இலங்கை மக்களிடையிலான வலுவான தொடர்புகள் சுட்டிக் காட்டப்படுவதுடன் கடல் மார்க்கமாக மிகவும் நெருக்கமான இந்த அயல்நாடுகளைச்சேர்ந்த மீனவ சமூகங்களிடையிலான நெருக்கமான உறவினைக் கட்டி எழுப்புவதற்கும் இவ்வாறான திருவிழா வழிசமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
04 மார்ச் 2023
