வடமாகாணம் – வவுனியா மாவட்டம் வவுனியா – புதுக்குளம் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்
சிந்தையிலே வீற்றிருந்து சீர்வழங்கும் சித்திவிநாயகரே
சீரான நல்வாழ்வை அளித்தெம்மை வாழவைக்க வந்திடுவார்
உள்ளத்தில் இருத்தியவர் நல்லருளைப் பெற்றிடுவோம்
புதுக்குளம் கோயில் கொண்டுறையும் விநாயகர் அருளிடுவார்
வழித்துணையாயிருந் தெமக்கு காப்பளிக்கும் சித்திவிநாயகர்
வருந்தீமை தடுத் தெம்மை வாழவைக்க வந்திடுவார்
உள்ளத்தில் இருத்தியவர் பேரருளைப் பெற்றிடுவோம்
புதுக்குளம் கோயில் கொண்டுறையும் விநாயகர் அருளிடுவார்
வந்ததுன்பம் போக்கிவிடும் வரும் துன்பம் தடுத்துவிடும் சித்திவிநாயகர்
வாழ்வுக்கு வழிகாட்டி வல்லமையாய் வாழவைக்க வந்திடுவார்
இதயத்தில் இருத்தியவர் நல்லியக்கம் பெற்றிடுவோம்
புதுக்குளம் கோயில் கொண்டுறையும் விநாயகர் அருளிடுவார்
புத்துணர்வு தந்து பொலிவுதரும் சித்திவிநாயகர்
புத்துணர்ச்சி தந்து வழிகாட்டி வாழவைக்க வந்திடுவார்
நெற்றியிலே இருத்தியவர் வழிகாட்டல் பெற்றிடுவோம்
புதுக்குளம் கோயில் கொண்டுறையும் விநாயகர் அருளிடுவார்
வன்னித் தமிழ் மண்ணில் வந்துறையும் விநாயகர்
வறுமை நிலை போக்கும் வழிகாட்டி வாழவைக்க வந்திடுவார்
சிந்தையிலே இருத்தி சீர்வாழ்வைப் பெற்றிடுவோம்
புதுக்குளம் கோயில் கொண்டுறையும் விநாயகர் அருளிடுவார்
வளம் கொண்ட வன்னியிலே காட்சிதரும் சித்திவிநாயகர்
வற்றாத கருணை தந்து வளமாக வாழவைக்க வந்திடுவார்
நல்லெண்ணம் மனதிருத்தி உயர் வாழ்வைப் பெற்றிடுவோம்
புதுக்குளம் கோயில் கொண்டுறையும் விநாயகர் அருளிடுவார்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.