வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் தொண்டமனாறு, அருள்மிகு செல்வச்சந்நிதி முருகன் திருக்கோயில்
சிந்தையிலே இருந்தெமக்கு அருள்பொழியும் வேல்முருகன்
சீரான வாழ்வினையே எமக்களிப்பான் உறுதி கொள்வோம்
செல்வநிலை தந்தெமக்கு சுகவாழ்வு உறுதி செய்வான்
செல்வச் சந்நிதியுறை உமையவளின் இளமகனார்
வடஇலங்கை கோயில் கொண்டு வளமளிக்கும் வேல்முருகன்
வற்றாத கருணையினை எமக்களிப்பான் உறுதி கொள்வோம்
தொட்டதெல்லாம் துலங்கச் செய்து தூயநிலை உறுதி செய்வான்
செல்வச் சந்நிதியுறை உமையவளின் இளமகனார்
தீயபகை கொடுமைகளைத் துடைத் தெறிந்து காப்பளிக்கும் வேல்முருகன்
திடமான மனவுறுதி எமக்களிப்பான் உறுதி கொள்வோம்
தூயவள வாழ்வைத் தந்தெமக்கு உறுதி செய்வான்
செல்வச் சந்நிதியுறை உமையவளின் இளமகனார்
கேட்கும் நல்லவரம் தந்தெம்மை ஆற்றல் தரும் வேல்முருகன்
காலமெல்லாம் உடனிருந்து வழிகாட்டி விட்டிடுவான் உறுதி கொள்வோம்
கவலைகளைப் போக்கியென்றும் இதமளிப்பான் உறுதி கொள்வோம்
செல்வச் சந்நிதியுறை உமையவளின் இளமகனார்
வந்ததுன்பம் துடைத் தெறிந்து இன்பநிலை தரும் வேல்முருகன்
வையகத்தில் தலைநிமிர்ந்து வாழவைப்பான் உறுதிகொள்வோம்
வெற்றிகளைத் தந்தெம்மைத் தலைநிமிர
உறுதி செய்வான்
செல்வச் சந்நிதியுறை உமையவளின் இளமகனார்
தமிழ் இனத்தின் காவலனாய் திகழ்கின்றன வேல்முருகன்
தரணியிலே தமிழர் நலன் காத்திடுவான் உறுதிகொள்வோம்
தலை தாழா நிலைதந்து உயர்வினையும் உறுதி செய்வான்
செல்வச் சந்நிதியுறை உமையவளின் இளமகனார்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.