பெருந்தோட்டப் பகுதிகளில்அண்மைக்காலமாக, தோட்டத் தொழிலில் இல்லாதவர்களை அவர்கள் வசிக்கும் லயன் அறைகளில் இருந்து வெளியேற வேண்டும் என தோட்ட நிர்வாகங்கள் கட்டளையிட்டு வருகின்றன. மறுபுறம் தோட்டங்களில் நாடகங்களை அரங்கேற்றுவதற்கும் நிர்வாக அனுமதி வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இத்தகைய அடக்குமுறைகளை எல்லாம் கடந்தே மலையகப் பெருந்தோட்ட மக்கள் இன்று 200 வருடங்களை அடைந்துள்ளனர். மலையகம் 100 ல் நடைமுறையில் இருந்த இத்தகைய அடக்குமுறைகள் மலையகம் 200 லும் வெளிப்படுவது மலையக அரசியல் செயற்பாடுகளில் நிலவும் பலவீனத்தையே குறித்து நிற்கிறது. இவற்றை எல்லாம் எதிர்கொள்ள மாற்றுச் சிந்தனைகளுடன் கூடிய புதிய தலைமுறை அரசியல் முன்னெடுப்பு அவசியம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலையக அரசியல் அரங்கம் சார்பில் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யும் பட்சத்தில் அல்லது சேவைக்காலம் முடிவடையும் பட்சத்தில் அவர்கள் குடியிருந்த வீட்டில் இருந்து வெளியேற்றுதலும் தோட்டங்களில் நாடகங்களை நடாத்துவதற்கு தோட்ட அனுமதி கோருதல் போன்றனவும் பல தசாப்தங்களுக்கு முன்பு இருந்த நடைமுறை ஆகும்.
1964 சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் தோட்டங்களை விட்டு லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்தியா சென்றதன் காரணமாக இந்த நடைமுறையில் மாற்றம் வந்தது. போதுமான வெற்றிடங்கள் இருந்ததன் காரணமாக தொடர்ந்தும் தோட்டத்தில் வாழும் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பின்னாளில் உபகுடும்பங்களின் எண்ணிக்கை உயரும்போது தற்காலிக கூடாரங்கள் அமைத்தும் லயன் அறைகளை விஸ்தரித்தும் தாமாகவே அமைத்துக் கொள்ளும் நடைமுறைகளும் இயல்பாக எழுந்தன. தோட்ட நிர்வாகங்கள் இதற்கு பெரும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை.
அதேநேரம் நாகரீகமான தனி வீடுகளுக்கான அவசியம் உணரப்பட்டு அதுவே அரசியல் கோரிக்கைகளாகவும் அபிவிருத்தித் திட்டங்களாகவும் மாறின.
ஆனால், இவை எல்லாம் இப்போது கிடப்பில் போடப்பட்ட அரசியல் நடவடிக்கைகளை ஆகிவிட்டன. மலையகத்தில் தோற்றம் பெற்ற புத்தாக்க அரசியல் சிந்தனைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு புத்தர் அரசியலிலும் பாசாங்கு அரசியலிலும் தலைவர்கள் என்போர் காலம் கழிக்கின்றனர். ஓல்ட்டன் தோட்ட தொழிற்சங்க போராட்டத்தில் தொழிலாளர்களைக் கைவிட்டதுபோல இன்று ஒட்டு மொத்தத் தோட்டத்
தொழிலாளர் வர்க்கத்தையும் தொழிற்சங்க அரசியல் தலைமைகள் கைவிட்டுள்ளன.

