அதிபரின் வாழ்த்துரை
“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.”
(சுவாமிவிவேகானந்தர்)
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து பெரும் கனவுகளோடு கூலித் தொழிலாளர்களாக இலங்கைக்கு வருகை தந்தவர்களது பிள்ளைகள் படிப்பதற்காக கண்டி மாநகர் மத்தியிலே 1837 ம் ஆண்டு ‘கண்டி பஜார் ஸ்கூல்’ என்ற பெயரில் தனி தமிழ் மொழி மூலப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் ‘கிறிஸ்து தமிழ் கலவன் பாடசாலை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்துநாதர் ஆலயத்தினால் 1962ல் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. 1994ம் ஆண்டு அப்போதைய அதிபர் திரு.நாமதேவன் அவர்களால் “விவேகானந்தா தமிழ் வித்தியாலயம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இப்பாடசாலை
கடந்த ஜூன் மாதம் 22ம் திகதியில் இருந்து விவேகானந்தாக் கல்லூரியாக புதிய பாதையில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
“மாற்றம் ஒன்றே மாறாதது”
நவீன யுகத்தில் நாம் காலடி பதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
குறிப்பாக மாணவர்களின் மனப்பாங்கினில் மாற்றம் ஏற்படும் போது கற்றல் இலகுவாகுவதோடு மாணவர்கள் புத்தெழுச்சியும் பெறுகின்றனர்.
அதுமட்டுமல்லாது பாடசாலையும் சமூகமும் ஒன்றாக இணையும் போது பாடசாலையின் துரித வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது.
கண்டி மாநகரில் 187 வது அகவையை நோக்கிய மிகப் பழமையான வரலாற்றைக் கொண்ட எமது கல்லூரியின் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சங்கத்தினர்,பழைய மாணவர் சங்கத்தினர்,சமூக நலன் விரும்பிகள் அனைவரதும் அயராத முயற்சியினால் முதல் முறையாக 15/06/2023 அன்றைய தினம் நடைபெறும் நடைபவனி சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதிபர்
ஆர்.கலையரசி


