2022 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இவ் வாரம் வெளியாகியிருந்தது. அதனடிப்படையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்கள் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் எமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பௌதிக விஞ்ஞானப் பிரிவில் மாணவன் சிவசங்கர் கிருஷ்ண பிரசாந்த் 3A தர சித்திகளைப் பெற்று 2.46 என்ற Z.புள்ளிகளுடன் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்ற சாதனையுடன் பொறியியல் துறையில் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.
அவருடன் இணைந்து மொத்தமாக 4 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளதோடு மொத்தமாக 10 மாணவர்கள் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் பல்கலைக்கழக வாய்ப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய மாணவர்களுள் 8 மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பினை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் தொழிநுட்ப பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய ராஜவேலு தினுஷன் ABC தர சித்திகளுடன் மாவட்ட மட்டத்தில் 10 வது இடத்தினை பெற்று இத்துறையில் முதல்நிலை மாணவனாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிறார்.
இப்பிரிவில் பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப (ICT) பாட பெறுபேற்றிற்கமைய வலய மட்டத்தில் முதன்மை நிலையை பெற்றுக்கொண்டுள்ளனர். மேலும் பொறியியல் தொழிநுட்ப பிரிவில் இரண்டு மாணவர்களும் உயிர் முறைமை தொழிநுட்ப பிரிவில் 3 மாணவர்களும் பல்கலைக்கழக வாய்ப்பினை பெற்றுக்கொண்டுள்ளனர். வணிகத்துறையில் சண்முகம் ராமானிஜம் மற்றும் ராமர் தனிஷ் குமார் ஆகிய மாணவர்கள் 3A தர சித்திகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளதுடன் வணிகத்துறையில் 16 மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பினை பெற்றுள்ளமை சிறப்பம்சமாவதோடு 96% சித்தி பெறுபேற்றினை பெற்றுள்ளார்கள்.
கலைப்பிரிவில் தியாகராஜாரக்ஷிகா, பெருமாள் சாதனா ஆகியோர் 3A தர சித்திகளைப் பெற்றுள்ளதோடு ரவிந்திராஜ் சுவர்ணமுகி 2AB தர சித்திகளுடன் Z.புள்ளியில் முதலிடம் பெறுகின்றார். இவ்வருடம் கலைத்துறையில் 12 மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பினை பெற்றிருக்கின்றார்கள்.
ஒட்டுமொத்தமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 79% மாணவர்கள் சித்தி பெறுபேற்றினை பெற்றிருக்கின்றார்கள். கடந்த வருடம் 47 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை 52 ஆக பல்கலைக்கழக வாய்ப்பினை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது.
இச் சிறப்பு பெறுபேற்றினை பெற்ற மாணவர்களுக்கும் அவர்களை பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் சிறப்பாக வழிநடத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும்
அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் இணைந்து வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றார்கள்.
