உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி (Yoweri Museveni) ஆகியோருக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனது அழைப்பையேற்று வருகைத் தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்த உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி, சரிவடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தைப் பாராட்டியதோடு, அதற்காக நாட்டு மக்களின் பாராட்டும் கிட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் புதிய பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கை, பொருளாதார ரீதியில் முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை 2024 ஆம் ஆண்டின் புதிய அபிவிருத்தி இலக்குகளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருப்பதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
