இலங்கை மற்றும் சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 381 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காது 210 ஓட்டங்களைப் பெற்று இரண்டு சாதனைகளை படைத்திருந்தார்.
சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை அணி வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையையும் மற்றும் இலங்கை அணி வீரர் ஒருவர் பெற்ற முதல் இரட்டைச் சதம் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
மேலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பதிவான 12 ஆவது இரட்டைச் சதம் இதுவென்பது சிறப்பம்சமாகும்.
139 பந்துகளுக்கு முகங் கொடுத்து 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 20 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவிஸ்க பெர்ணான்டோ 88 ஓட்டங்களையும் சதீர சமரவிக்கிரம 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் பரீட் அஹமட் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அதன்படி, 382 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
அவ்வணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அஸ்மத்துள்லா ஆட்டமிழக்காது 149 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் மொஹமட் நபி 136 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுக்களையும் துஷ்மந்த சமீர இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
