டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை (AI ) உருவாக்குவதற்கான சட்டங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
துரித டிஜிட்டல் பரிவர்த்தனையின் ஊடாக எமது நாட்டின் பொருளாதாரத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற்ற முடியும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் (26) முற்பகல் ஆரம்பமான டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் பிரதான உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்திய உயர்ஸ்தானிகராலயமும் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாகம் தொடர்பில் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவும் அனுபவமும் கொண்ட பல இந்திய மற்றும் இலங்கை நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர்.
புதிய சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரமாக இலங்கையின் பொருளாதாரத்தை மாற்ற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
