சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்றாகும். மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மே தினத்தின் தொடக்கத்தை இரண்டு முக்கிய புரட்சிகள் அடையாளப்படுத்துகின்றது. 1776 இல் அமெரிக்காவின் 13 மாநிலங்களில் வெடித்த தொழிலாளர் புரட்சி. இப்புரட்சியினையடுத்து சிகாகோ தொழிலாளர் புரட்சி 1885 இல் ஆரம்பமாகி 1886 இல் மே தினமான முதலாம் திகதியில் முடிவுற்றுள்ளது. எட்டு மணி நேரம் தொடர்பான போராட்டம் 1886 இல் சிகாகோவில் வெற்றியளித்ததோடு மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
1886 ஆம் ஆண்டு மே முதலாம் திகதியில் 88,000 தொழிலாளர்களின் பங்கேற்புடன் “எட்டு மணித்தியாலம்” போராட்டம் ஆரம்பமானது. 307 நிறுவனங்களின் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் குதித்திருந்தனர். அடக்குமுறை அதிகரித்தது. எனினும் போராட்டம் தொடர்ந்தது. புரட்சி வெடித்து இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கை வெற்றிகண்டது. இதனை நினைவு கூறும் விதமாகவே வருடா வருடம் மே தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இலங்கையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மே தின ஊர்வலங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
