வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டவர் ஒருவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசா விநியோகிக்கும் முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும்.
சுற்றுலாத் துறை நாட்டுக்குள் புத்துயிர் பெற்று வரும் நிலையில் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகின்ற வேளையில் அறவிடப்படும் விசா கட்டணத்தை தொடர்ச்சியாக 50 டொலர்கள் என்ற வரையறைக்குள் பேணுமாறு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது சுற்றுலாத் துறையினர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது சுற்றுலாத்துறையின் எதிர்காலத்துக்கு பெரும் பக்கபலமாக அமையுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
