நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த லொறி ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று (02) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் லொறியில் பயணித்த இருவரும் மயிரிழையில் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நானுஓயா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த லொறியினை பாரம் தூக்கியின் துணையுடன் மீட்டெடுத்துள்ளனர்.
நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த வீதியினை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் – குறித்த வீதியில் அதிகமாக வெளி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களே அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறன , பெரும்பாலான விபத்து சம்பவங்கள் வீதியில் அதிக வேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்பட்டுள்ளது , அத்துடன், பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதிகளின் கவனயீனத்தினால் ஏற்படுகிறது .
இவ்வீதி செங்குத்தான அதிக சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் ஏராளமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இது இவ்வாறிக்க குறித்த வீதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் இவ்வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதற்கு நுவரெலியா மாவட்ட செயலகம் தடை விதித்து உள்ளது, மேலும் குறித்த வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்வதற்காக நானுஓயா பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுமுள்ளனர் .
எனவே இனி வரும் காலங்களில் குறித்த வீதியினை பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.