இன்று மதியம் (31) மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டுக்கு முன் வெட்டி வைக்கப்பட்டிருந்த தளத்தில் மண்வெட்டியுடன் குறித்த சிறுமியும் 17 வயதுடைய குறித்த சிறுமியின் சகோதரனும் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டினுள் இருந்த குறித்த இரண்டு சிறுவர்களின் பெற்றோர் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது தனது பிள்ளைகள் இருவரும் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்து கூக்குரல் இட்டூ அயலவர்களின் உதவியை நாடி உள்ளனர்.
பின்னர் கூக்கூரல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அயலவர்கள் உடன் இருவரையும் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயங்களுக்கு உள்ளான சிறுமியின் 17 வயதுடைய சகோதரன் பசறை வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
