8 இலட்சம் ரூபாய் பாடநூல்கள் 47,000 ரூபாய்க்கு பழைய காகிடக் கடைக்கு விற்பனை: 5 பேர் விளக்கமறியலில்!
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்குச் சொந்தமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடநூல்களை, வெறும் 47,000 ரூபாய்க்கு வெளிநபர் ஒருவருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து சந்தேகநபர்களும் இன்று கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முதலாம் ஆண்டிற்கான தமிழ் செயல்பாடு மற்றும் பாடநூல்கள் 19,892 காணாமல் போனமை குறித்து கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரி ஒருவர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த புத்தகத் தொகுதியை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, அவற்றை பழைய காகித வியாபாரி ஒருவருக்கு 47,000 ரூபாய்க்கு விற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேல் விசாரணைகளை தலங்கம பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
