க.கிஷாந்தன்
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சாம்பசிவம் சதிஸ்குமார் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பொகவந்தலாவ பிரதேச பிராந்திய ஊடகவியலாளர் சதீஸ்குமார் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தமிழ் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பலவற்றின் பிராந்திய நிருபராகப் பணிபுரியும் பொகவந்தலாவ எஸ்.சதீஸ்குமார் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் (14) அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
பொகவந்தலாவ கெக்கர்ஸ்வோல்ட் இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் (14) பிற்பகல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும், குறித்த நபர் ஒருவர் தனக்குப் பின்னால் வந்து அருகில் கடையொன்றில் இருந்து கத்தியை எடுத்து தனது தலையில் தாக்கியதாக சதீஸ்குமார் தெரிவித்தார்.
மேலும், சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மதுபோதையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக குரல் வேட்பாளரின் ஆதரவாளரே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், இது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் ஊடகவியலாளர் சதீஸ்குமார் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில், இன்றைய தினம் ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
