( மஸ்கெலியா நிருபர் )
மஸ்கெலியா மவுசாக்கொல்லை தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட எட்டு குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் அனர்த்த நிவாரண உதவித் திட்டத்தின் ஊடாக தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஏ. சிவஞானம், உபதலைவர் ஆர்.விஸ்வநாதான் ஆகியோர் தலைமையில் மன்றத்தின் உறுப்பினர்கள் எதிர்வரும் 26 ஆந் திகதி ஞாயிறுக்கிழமை நேரில் சென்று பதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை கையளிக்கவுள்ளார்கள்.
தீ விபத்தில் உடைமைகளை இழந்தும், அத்தியாவசியப் பொருட்களை பறிகொடுத்தும், அகதிகளாக தங்கியுள்ள மக்களுக்கு பிரதேச நலன் விரும்பிகளின் அவசர வேண்டுகோளுக்கிணங்க அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் சமையல் பாத்திரங்கள், உடுதுணிகள், மருந்து வகைகள் மற்றும் உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப் பைகள், பாதணிகள், சீருடைத் துணிகள் முதலான உதவிகளும், குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்குத் தேவையான பால்மா வகைகள் உடைகள் முதலானவற்றையும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
