ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, பொலிஸார் சிசிடிவி (CCTV) காட்சிகளை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி பிற்பகலில் ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் வசித்து வந்த வயோதிப தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் எஸ். காளிமுத்து சத்திவேல் (82 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலாதேவி (82 வயது) ஆகியோரே உயிரிழந்தனர்.
கொலையைச் செய்த சந்தேகநபர், அவர்கள் அணிந்திருந்த சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார், தற்போது சந்தேகநபரின் நடமாட்டங்கள் அடங்கிய சிசிடிவி காட்சிகளைத் திரட்டியுள்ளனர்.
விசாரணைகளில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்:
சந்தேகநபர் கடந்த 21ஆம் திகதி காலையிலேயே டிக்கோயா நகருக்கு வந்துள்ளார். அங்குள்ள பல நகைக்கடைகளுக்குச் சென்று, தங்க நெக்லஸ் ஒன்று வாங்கப் போவதாகக் கூறி பல மணிநேரம் நகரைச் சுற்றித் திரிந்து நோட்டமிட்டுள்ளார்.பின்னர் அன்று மதியம் 1:15 மணியளவில் தம்பதியினர் வசித்து வந்த கடைக்குள் நுழைந்து பதுங்கியிருந்த அவர், கொடூரக் கொலையைச் செய்துவிட்டு, மாலை 5:30 மணியளவிலேயே கடையை விட்டு வெளியேறியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரக் கொலையைச் செய்த சந்தேகநபரை விரைவாகக் கைது செய்வதற்காக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவசரத் தகவல்களை எதிர்பார்ப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரைப் பற்றிய ஏதேனும் விபரங்கள் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது ஹட்டன் பொலிஸாருக்கோ அறியத்தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

