ஈதலும் பல கோலால பூஜையும் ஓத லுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீர்பாத சேவையு மறவாத…..என்ற திருப்புகழ் வரிகளுக்கேற்ப ஈதல், ஓதல், ஈரம், கோலால பூசை, ஆசார நீதி சீர்பாதசேவை போன்ற அபரிதமான மனஎழுச்சிப் பண்புகளைக் கொண்டவர் அதிபர் சந்தர்ராஜ் ஆவார்.
கல்வி என்னும் வான்பரப்பில் கற்றல், கற்பித்தல் செயற்பாட்டில் வான்மதியாக விளங்கிய இவர் தனது 34வருட ஆசிரிய சேவையில் குறிப்பாக 10வருட அதிபர் பணியினை பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் மாணவர்களுக்காக அளப்பரிய சேவையினை அர்ப்பணிப்புடன் ஆற்றி நன்மதிப்பைப் பெற்று தனக்கெனவொரு முத்திரையை பொறித்து 2025 பெப்ரவரி 09ம் திகதி அன்று சேவையினை நிறைவுசெய்து ஓய்வு பெற்றார்.
அவரது மாணவர்களில் பலர் தற்போது ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும் வேறுபல உயர் பதவிகளையும் அலங்கரித்துக் கொண்டு இருக்கின்றனர்.
சந்தர்ராஜ் அதிபர் அவர்கள் பலஆளுமை மிக்க அதிபர்களின் கீழ் பணிபுரிந்ததனால் வழங்கப்படும் கடமைப்பொறுப்புக்களை அதன் கனகாத்திரம் கருதி கச்சிதமாக நிறைவு செய்யும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார்.
இறுதி ஒரு தசாப்தமாக பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் கடமையாற்றும்போது பாடவிதானத்திலும், இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பலவகிபங்குகளை ஆற்றினார்.
க.பொ.த.சாதாரணதர வகுப்புக்களுக்கு தமிழ்மொழி, சைவசமயம், இலக்கிய நயம் ஆகிய பாடங்களையும். க.பொ.த. உயர்தர கலைப்பிரிவு வகுப்புக்களுக்கு தமிழ், இந்து நாகரீகம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார். பாடசாலை நாட்கள் தவிர்ந்த சனி, ஞாயிறு நாட்களிலும் மாணவர்களை அழைத்து மேலதிக வகுப்புக்களை
நடாத்தியும்..
அப்பாடங்களில் துறைசார்ந்த வல்லுனர்களை அழைத்துக் கருத்தரங்குகளையும் முன்னின்று நடாத்தியும் பரீட்சைக்குத் தயார் செய்தார். இதனால் தனது காலப்பகுதியில் மாணவர்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டுடன் பேணவைத்து பாடசாலைக்குச் சிறந்த விசேட பெறுபேற்றைப் பெற்றுக் கொடுத்தவராவார்.
தமிழ் இலக்கிய மன்றப் பொறுப்பாசிரியராகவும், தமிழ்மொழித்தின குழு பொறுப்பாசிரியராகவும்,
இவர் தன்னலங்கருதாது சேவையாற்றி மாணவர்களின் கல்வி. கலை. கலாசார, சமய பொருளாதார மேம்பாடுகளுக்கான அளப்பரிய சேவையினை ஆற்றி மனங்களையும் வென்று நல்லுறவைப் பேணியதனால் பெற்றோர் மத்தியிலும் தமிழ் கல்விச்சமூகம், பண்டாரவளை சமூகம் மத்தியிலும் போற்றப்படக்கூடிய ஒருவராகத் திகழ்கின்றார்.
இவர் தனது காலப்பகுதியில் கல்விக்கு வெண்தாமரையாகவும் ஏனைய நலன்களுக்கு செந்தாமரையாகவும் திகழ்ந்தார். தாம் அதிபராக நெருக்கடி சூழ் காலப்பகுதியில் 2015ம் ஆண்டு பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் இணைந்து கொண்ட இவர் நாம் அறிந்த வரையில் அவர் ஓய்வு பெறும் வரையிலும் பாடசாலைக்கு நல்ல வளவாளராகவும் அபிவிருத்திப் பணிகளுக்கு உறுதணையாகவும் கல்விச் செயற்றிட்டங்களுக்கெல்லாம் முக்கிய துணையாகவும் விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டு கல்லூரியில் நாங்கள் 1998 O/L Reunion நிகழ்வை பிரமாண்ட அளவில் கொண்டாடியபோது அது சிறப்புற முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவர். அப்போது எங்கள் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கல்லூரியின் வரலாற்றினையும் வலய, மாகாண, தேசிய மட்ட சாதனைகளையும், கல்விச் சாதனைகளையும் தொகுத்து நன்றாக வழங்கியவர்.
இதுமட்டுமன்றி கல்வி அமைச்சால் நடாத்தப்படும் தமிழ் தினப்போட்டி, கலைவிழா, சமய போட்டிகளில் மாணவர்களை கலந்து கொள்ளவைத்து வெற்றிக் கேடயங்களையும், நற்சான்றுப் பத்திரங்களையும் பெறவைத்தவர்.
கல்லூரியில் பிரதி திங்கள்கிழமைதோறும் காலைக் கூட்டத்தில் காந்தக்குரல் காத்திரமான நற்சிந்தஓனைகளை உதிர்த்தவர்..
இவரின் வயது மூப்பால் ஓய்வேதவிர உடலுக்கும் மனதுக்கும் ஓய்வல்ல.
இவர் தமிழ்ப்பணிவளர, ஆன்மீகப் பணிஊற்றெடுக்க
கல்விப் பணி தொடர வாழ்த்துவதோடு ஆரோக்கியத்துடன் குடும்ப உறுப்பினர்களுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்
1998 O/L மாணவர்கள்
பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி


