ஜனாதிபதி திரு அனுரா குமார திசாநாயக்க
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு
2026 ஜனவரி 15ம் திகதி
பேரிடருக்கு பின்னர் அரச நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானச் செயற்பாடுகளில் மலையகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் அது தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி முன்வைக்கும் யோசனைகளும்.
நாடு முகம் கொடுத்த டித்வா பேரனர்த்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முன்மொழிந்த நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானச் செயற்பாடுகளில் மலையகத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதனை ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் .
1. பேரிடரில் பாதிப்புற்ற மலையகத் தமிழ் மக்களின் தகவல்களும் தரவுகளும் முறையாகவும் சரியாகவும் பதியப்படவில்லை.
2. தோட்டப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிவாரணப் பொருட்கள் முறையாக பகிர்ந்தளிக்கப் படுவதில்லை.
3. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை வசதிகள் முறையாக கவனிக்கப்படுவதில்லை (ஆண்கள் பெண்கள் என்ற வகையில்).
4. அரசு அறிவித்துள்ள நிவாரணங்கள், சுற்று நிரூபங்கள், வழிகாட்டல்கள் தொடர்பாக மக்களுக்கு சரியான நேரத்தில் முறையான தெளிவுப்படுத்தல்கள் அவர்களின் தாய் மொழியில் மேற் கொள்ளப்படவில்லை.
5. மிகவும் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள மலையக தோட்டப்புற பாதைகள் மற்றும் நிலப்பரப்பு மீள் கட்டுமானம் தொடர்பில் தெளிவான எந்தவொரு வேலைத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை. அனேகமான அரச அதிகாரிகள் பழைய சுற்று நிரூபங்களையே இன்றும் பயன்படுத்துகின்றனர்.
6. பாதிக்கப்பட்ட (முழுமையாக / பகுதியளவில் ) வீடுகளுக்கான நிவாரணம் தொடர்பில் சேத நிலமைகளை வரையறை செய்வதிலும் அரசாங்கத்தின் முன் மொழிவுகளை நடைமுறை படுத்துவதிலும் முரண்பட்ட நிலையே காணப்படுகின்றது.
7. பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு தொடர்பாக மேற் கொள்ளப்படும் கட்டட ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படாமலும் அது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக தெளிவுபடுத்தப்படாமலும் பாதிக்கப்பட்ட வீடுகளிலேயே மீள குடியேறுமாறு பலவந்தப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
8. அரச அரச மற்றும் அரச தனியார் நிறுவனங்களுக்கிடையே ஒழுங்கான ஒருங்கிணைப்பு இன்மையால் மலையகத் தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரம், வீட்டு வசதி பாடசாலை கல்வி போன்ற பலவற்றை இழக்கும் அபாயம் ஏற்றப்பட்டுள்ளது.
முன்மொழிவுகள்
மலையகத்தின் அனைத்து குடியிருப்பு பிரதேசங்களும் முழுமையான விஞ்ஞானப்பூர்வமான நில ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை எந்தவொரு சந்தர்ப்பதிலும் பொது மக்களால் கையாளக் கூடிய வகையில் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட வேண்டும்.
இயற்கைப் பேரிடரால் முழுமை பாதிக்கப்பட்ட மற்றும் இனி குடியேற இயலாது என உறுதிப்படுத்தப்பட்ட தோட்டபகுதிகளில் வாழ்வோருக்கு தற்போது அரசாங்கம் அறிவித்ததுள்ள ஐம்பது இலட்சம் பெறுமதியான வீடு, அரச காணி அல்லது காணி பெற்றுக்கொள்வதற்கான ஐம்பது இலட்சம் பணம் உள்ளிட்ட அனைத்து நிவாரணங்களும் எந்தவொரு பாகுபாடுமின்றி வழங்கப்பட வேண்டும்.
ஏனைய மலையகத் தோட்ட லயன் குடியிருப்புகள் மற்றும் தற்காலிக வீடுகளில் வாழ்பவர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி 20 பேர்ச் உரித்துடனான காணி உடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அது ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் பாதுகாப்பான நிலம் உறுதிசெய்யப்பட்டு குடும்பத்திற்கு தலா 20பேர்ச் என்ற அடிப்படையிலும் கிராமிய கட்டமைப்புக்கு தேவையான ஏனைய நிலப்பரப்பு கணிக்கப்பட்டு முறையாக வரையறை செய்யப்பட்டு அந்த நிலப்பரப்பு அராசாங்கத்தினால் சட்டபூர்வமாக கையகப்படுத்தி உறுதி பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மலையகத் தமிழ் மக்களுக்கு காணி – வீட்டுரிமை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் முரண்பட்ட கருத்துகளையே முன்வைத்து வருகின்றது. ஆனால் இவர்களுக்கு காணி வழங்குவது தொடர்பில் 1972ம் ஆண்டு காணி சீர்திருத்த சட்டத்தில் 3Bபிரிவில் தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்படும் காணிகளில் ஏக்கரில் எட்டில் ஒரு பங்கு அதாவது 20 பேர்ச் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று மலையகத் தமிழ் மக்களுக்கு தேவையான வீடமைப்புக்கான காணி மிக தாரளமாக தோட்டப் பிரதேசங்களில் காணப்படுகின்றது.
குறிப்பு:
மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சினால் 2018ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி ஒரு லட்சத்து பதினேழாயிரம் ஹக்டேயர் பயிரடப்படாத நிலம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்த நிலையினை, விசேடமாக மலையக நிலையினை கையாள மலையக கிராமிய அபிவிருத்தி அதிகாரசபை தலைமையில் ஒருங்கமைப்புச் சபை ஒன்று நிறுவப்படவேண்டும் .
மலையகத் தமிழ் மக்கள் தாங்கள் ஓரம்கட்டப்படுவது தொடர்பில் முறையிடவும் அது தொடர்பில் உடனடி நடிவடிக்கை எடுக்கவும் குறைகேள் பொறிமுறை ஒன்றை நிறுவ வேண்டும்.
