கிளங்கன் மருத்துவமனை சர்ச்சை: யுவதியின் உடலம் அவமரியாதை செய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லை – விசாரணைக் குழு தகவல்!
டிக்கோயா: நுவரெலியா – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதி ஒருவரின் உடலம் அவமரியாதை செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என மருத்துவமனை அத்தியட்சகர் மொஹமட் பாரூக் மொஹமட் பஷீல் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி உயிரிழந்த யுவதி ஒருவரின் உடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மூவர் உடலத்திற்கு அவமரியாதை இழைத்ததாகப் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய மருத்துவமனை நிர்வாகத்தினால் ஒரு குழுவும், மாகாண சுகாதார சேவைகள் பணிமனையினால் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மருத்துவ அத்தியட்சகர்:
“சி.சி.ரி.வி (CCTV) காட்சிகள் மற்றும் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டன. இதில் உடலம் அவமரியாதை செய்யப்பட்டமைக்கான எந்தவித ஆதாரங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணைக் குழுக்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் இன்று மாலை எமக்குக் கிடைக்கவுள்ளன,” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இச்சம்பவத்தைக் கண்டித்து இன்று (09) நடத்தப்படவிருந்த போராட்டங்களுக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் மலையகப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விசாரணை அறிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.
