கொழும்பு: இலங்கையில் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று (09) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி:
ஒரு லீற்றர் ஓட்டோ டீசல்: 22 ரூபாவினால் அதிகரிப்பு.
ஒரு லீற்றர் லங்கா சுப்பர் டீசல்: 24 ரூபாவினால் அதிகரிப்பு.
ஆணைக்குழுவின் விளக்கம்
இந்த திடீர் விலை அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா, டீசல் விலை உயர்ந்த போதிலும் அது தற்போதைய பேருந்து கட்டண சூத்திரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டார்.
“நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை உயர்ந்துள்ள போதிலும், அது பேருந்து கட்டண திருத்தத்திற்கு போதுமான காரணியாக அமையாது. இதன் காரணமாக தற்போது நடைமுறையிலுள்ள பேருந்து கட்டணங்களே தொடர்ந்து அமுலில் இருக்கும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம், எரிபொருள் விலை உயர்வால் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என பயணிகள் மத்தியில் நிலவிய அச்சம் தணிக்கப்பட்டுள்ளது. சாதாரண பேருந்து சேவைகள் முதல் அதிவேக நெடுஞ்சாலை சேவைகள் வரை பழைய கட்டணங்களே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
