நயினாதீவில் பயங்கரம்: இரு பூசாரிகளுக்கிடையே மோதல் – நாவலப்பிட்டி குருக்கள் வெட்டிக்கொலை!
யாழ்ப்பாணம்: நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்ததில், நாவலப்பிட்டியைச் சேர்ந்த குருக்கள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய கிருஷ்ணகுமார் என்ற குருக்களே உயிரிழந்துள்ளார்.
மோதலுக்கான பின்னணி
நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் பணியாற்றும் 35 வயதுடைய நிரந்தரப் பூசகருக்கும், நாவலப்பிட்டியிலிருந்து அங்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த கிருஷ்ணகுமார் குருக்களுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடே இந்த கொலைச் சம்பவத்திற்குக் காரணமாகியுள்ளது.
கொல்லப்பட்ட குருக்கள், வழமையாக நயினாதீவுப் பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு பூசை வழிபாடுகளுக்காகச் சென்று வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், அது வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இதில் படுகாயமடைந்த குருக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய நயினாதீவுப் பூசகரை இலக்கு வைத்து ஊர்காவற்றுறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். புனிதமான ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இந்தச் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
sources -Tamil mirror
