பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு விருந்து நடத்த வர்த்தகர்களிடம் பணம் பெறத் தடை: பொலிஸ் மா அதிபர் கடும் உத்தரவு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறும், வெளித்தரப்பினரின் நிதியுதவியுடன் உபசரிப்பு நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டல்கள் வருமாறு:
சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக வழங்கப்படும் அன்பளிப்புப் பொதிகள் (Gift Packs) மற்றும் பரிசு வவுச்சர்களை (Gift Vouchers) வழங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், சிரேஷ்ட அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் இவ்வாறான பரிசுகளைப் பொறுப்பேற்கக் கூடாது.
நிதி வசூலிப்புத் தடை: புத்தாண்டு உபசரிப்புகளுக்காக கீழ்நிலை உத்தியோகத்தர்களிடம் பணம் வசூலிப்பதோ அல்லது வர்த்தக சமூகத்தினரிடம் நிதி கோருவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அரச நிதி ஒதுக்கீடு: பொலிஸ் நிலையங்களில் நடத்தப்படும் புத்தாண்டு நிகழ்வுகளுக்காக, ஒரு உத்தியோகத்தருக்கு 250 ரூபாய் வீதம் பொலிஸ் வெகுமதி நிதியத்திலிருந்து (Police Reward Fund) வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை: இந்த உத்தரவுகளை மீறிச் செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மேற்பார்வை அதிகாரிகளுக்குப் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
17 நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத் தேவைகள் மற்றும் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 17 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் (OIC) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
