இலங்கை அரசாங்கம் வெளிநாடு ஒன்றிற்கு வழங்க வேண்டிய கடன் தவணைப் பணமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர், சைபர் ஹேக்கர் (Hacker) ஒருவரின் கைக்குச் சென்றுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
பின்னணி என்ன?
அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு 22.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கான கடன் தவணையாக 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி 31 வரையான காலப்பகுதிக்குள் 2.5 மில்லியன் டொலர் தொகையை திறைசேரி செலுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தத் தொகை உரிய கடன் வழங்குநருக்குச் சென்றடையாமல், இடைநடுவில் கணினி ஹேக்கர் ஒருவரால் திசைதிருப்பப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
விசாரணைகள் தீவிரம்
இந்த பாரிய நிதி முறைகேடு தொடர்பாக நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஏற்கனவே விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளது. முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில்:
இரண்டு பணிப்பாளர்கள்
ஒரு கணினி இயக்குபவர்
மற்றொரு அதிகாரி
உட்பட நால்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
சபாநாயகரின் தீர்மானம்
இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, சபாநாயகருக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்ற விசேட குழுவொன்றின் ஊடாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்னவின் கடிதம் குறித்து ஆராய்ந்து, இது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணைகளை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து சபாநாயகர் தீர்மானம் எடுப்பார்” எனத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த திறைசேரி மற்றும் நிதி அமைச்சு போன்ற நிறுவனங்களில் இவ்வாறானதொரு சைபர் ஊடுருவல் எவ்வாறு நடந்தது என்பது குறித்து நிதி அமைச்சு விரைவில் விரிவான விளக்கமளிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
