பொகவந்தலாவ: ராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 34 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 7.30 மணியளவில் ராணிகாடு – பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது அதன் பிரேக் (Brake) தொகுதியில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பேருந்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், மாணவர்களின் உயிரைக் காக்கும் முயற்சியாக சாரதி பேருந்தை வீதியோரத்திலிருந்த மண் திட்டில் மோதி நிறுத்த முற்பட்டுள்ளார். இதன்போதே மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் உடனடியாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில்:
34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் அதிகளவான மாணவர்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
