நாவலப்பிட்டி: கிரேக்ஹெட் (Craighead Estate) தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்குவதில் இடம்பெற்ற பாரிய ஊழல் முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் தகுதியற்ற 07 பேர் நீக்கப்பட்டு, உண்மையான பயனாளிகளுக்கு நீதி கிடைத்துள்ளது.
இந்தத் தோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 17 வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் தோட்ட அதிகாரிகள் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தகுதியற்றவர்களுக்கு வீடுகளை வழங்க முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இதனை எதிர்த்து தோட்ட மக்கள் கண்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை:
ஆணைக்குழுவின் அதிகாரி திருமதி ஜே. மயூரி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், தோட்ட நிர்வாகம் தயாரித்த பெயர் பட்டியல் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டது. புதிய பட்டியலைத் தயாரிக்குமாறு உத்தரவிடப்பட்ட போதிலும், தோட்ட நிர்வாகமும் பொறியியலாளரும் மீண்டும் பழைய பட்டியலுக்கே புள்ளிகளைச் சேர்த்து மோசடி செய்ய முயன்றனர். இதற்கு கிராம நிலதாரி கையொப்பமிட மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலையீடு மற்றும் அமைச்சின் அதிரடி:
இந்த முறைகேடு குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி துசாரி ஜயசிங்க, தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் திரு. பிரதீப் சுந்தரலிங்கம் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு மற்றும் இணைப்புச் செயலாளர் திரு. வசந்தமூர்த்தி ஆகியோரின் நேரடி விசாரணையைத் தொடர்ந்து:
முறையற்ற பழைய பட்டியல் 2025/08/20 அன்று நிராகரிக்கப்பட்டது.
கங்க இஹல கோரளை பிரதேச செயலகத்தின் ஊடாக முறையான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.
தகுதியற்ற 07 பேர் நீக்கப்பட்டு, அதிக புள்ளிகள் பெற்ற தகுதியான 07 பேர் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
நிர்வாகத்தின் முரண்டுபிடிப்பு மற்றும் இறுதித் தீர்வு:
புதிய பட்டியலை காட்சிப்படுத்தத் தோட்ட முகாமையாளர் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், கடந்த 2026/04/27 அன்று அமைச்சில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், அமைச்சின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க, கஹவத்தை பிளான்டேஷன் நிறுவனத்தின் CEO மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், “புதிய பட்டியலின் அடிப்படையிலேயே வீடுகள் வழங்கப்பட வேண்டும்” என இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தோட்ட மக்களின் நன்றிகள்:
நீண்ட போராட்டத்தின் பின்னர் தகுதியானவர்களுக்கு நீதி பெற்றுத்தந்த பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க, இணைப்பு செயலாளர் வசந்தமூர்த்தி, ப. இளங்கோவன் மற்றும் நீதியான விசாரணையை முன்னெடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருமதி ஜே. மயூரி ஆகியோருக்கு கிரேக்ஹெட் தோட்ட மக்கள் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
இப்படிக்கு
V. Kodish
Craighead Estate
Nawalapitiya
