விசேட தேவையுடையோர் குடும்பத்தின் ஒரே தூண் சரிந்தது – பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்..
யாழ்ப்பாணம்: கைபேசி ஊடாக ஒன்லைன் விளையாட்டுகளுக்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய மாணவர் ஒருவர், நேற்று அதிகாலை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கொக்குவில் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மாணவனின் குடும்பப் பின்னணி மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. அவரது குடும்பத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் விசேட தேவையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அக்குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாகவும், எதிர்காலத் தூணாகவும் பார்க்கப்பட்ட இந்த மாணவனின் இழப்பு அப்பகுதி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
நீண்டகாலமாக கைபேசி விளையாட்டுகளுக்குத் தீவிரமாக அடிமையாகியிருந்த நிலையில், நேற்று அதிகாலை அவர் தனது உயிரை மாய்த்துள்ளார். சடலமாக மீட்கப்பட்ட போது, அவர் வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவர் விளையாடிய விளையாட்டின் தாக்கமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம், மாணவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
ஆசிரியரின் குறிப்பு: ஒன்லைன் விளையாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளங்களின் அதீத பயன்பாடு இளைய சமூகத்தை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதை இச்சம்பவம் மீண்டுமொருமுறை எச்சரித்துள்ளது. பெற்றோர்களும் சமூகமும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
-யாழ். நிருபர் கஜிந்தன்-
