தனது கள்ளக்காதலன் மகளைத் துஷ்பிரயோகம் செய்தமையை மறைத்த மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தாய், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரால், சிறுமி நீண்டகாலமாகத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அப்பகுதி குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் உடனடியாகப் பொலிஸாருக்குப் புகாரளித்தனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குற்றத்தைச் செய்ததாகக் கருதப்படும் நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அவரைப் பிடிப்பதற்காகப் பொலிஸார் விசேட விசாரணைக் குழுக்களை அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தன் மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தடுத்து நிறுத்தாமல், அதனை மறைக்க முயன்ற குற்றச்சாட்டில் சிறுமியின் தாயைப் பதவிய பொலிஸார் கைது செய்தனர்.
நேற்று (05) கெபித்திகொல்லேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட குறித்த தாயை, எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுமி, தற்போது பொலிஸாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். சிறுமியின் எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து நீதிமன்றத்தில் மேலதிக சமர்ப்பணங்களைச் செய்யப் பொலிஸார் தயாராகி வருகின்றனர்.

