நோர்வூட் நகரில் புதிதாகத் திறக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் மதுபான சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (06) நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு பாரிய கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தின் அடையாளமாக, நகரின் வர்த்தக நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மதுபானசாலை திறக்கப்படுவதால் அப்பகுதியின் அமைதி சீர்குலையும் எனவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் போராட்டக்காரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த மதுபான சாலைக்கு நகர வர்த்தகர்கள் மட்டுமன்றி, பிரதேசவாசிகளும் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “தமது நகருக்குத் தேவையற்ற இத்தகைய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கியமை கண்டிக்கத்தக்கது” எனப் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடையடைப்பு காரணமாக நோர்வூட் நகரின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், போக்குவரத்துப் பாதைகளிலும் போராட்டத்தின் தாக்கம் உணரப்பட்டது. உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட்டு, மக்களின் விருப்பத்திற்கு மாறாகத் திறக்கப்படவுள்ள இந்த மதுபானசாலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
