மலையக பெருந்தோட்ட மக்களின் நில உரிமையை வலியுறுத்தி, கொழும்பு நோக்கி 140 கிலோமீட்டர் தூர நடைபயணத்தை மேற்கொண்ட சிறுவன் ஒருவன், ஹட்டன் நகரில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
மலையக மக்களின் காணி மற்றும் வாழ்வுரிமை கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று (மே 20) இச்சிறுவன் ஹட்டன் பகுதியை வந்தடைந்த போது, அங்கு விரைந்த ஹட்டன் பொலிஸாரும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் இணைந்து நடைபயணத்தை தடுத்து நிறுத்தினர்.
இவ்வளவு சிறிய வயதைக் கொண்ட ஒரு சிறுவனைப் பயன்படுத்தி, இவ்வளவு நீண்ட தூர நடைபயணத்தை மேற்கொள்வது சட்டப்படி சாத்தியமற்றது எனவும், அது சிறுவர் பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது எனவும் பொலிஸாரும் நன்னடத்தை அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, சிறுவனின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்த நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
