நாட்டின் சில பகுதிகளில் கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமை தற்போது படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், எதிர்வரும் மே 26 அல்லது 27 ஆம் திகதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டை முழுமையாக வந்தடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு பிராந்தியத்தில் மீண்டும் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த நாட்களில் பெய்த 200 முதல் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்திருந்த பல பிரதான ஆறுகள், நேற்று (23) மழை வீழ்ச்சி குறைந்தமையால் தற்போது வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்மட்டம் தற்போது முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது. மில்லகந்தை பகுதியில் இன்னமும் சிறியளவிலான வெள்ள நிலைமை காணப்படுகிறது. இதன் கிளையாறான குடா கங்கையின் நீர்மட்டம் இன்று முற்பகல் 6.51 மீற்றராகப் பதிவாகியுள்ளது. இது படிப்படியாகக் குறைந்தாலும் இன்னமும் ‘அனர்த்த மட்டத்திலேயே’ உள்ளது. இதனால் ஹொரணை – பெல்லபிட்டிய தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், புளத்சிங்கள – களுத்துறை வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டம் குறைவடைந்து வந்தாலும், துனுமலே பகுதி மக்கள் இன்னமும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தனகலு ஓயா வான்பாய்ந்ததால் ஜா-எல, பாரிஸ் பெரேரா மாவத்தை மற்றும் சுதுவெல்ல பகுதிகளில் பல வீடுகள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் சேதமடைந்த கால்வாய் பக்கச்சுவர் இதுவரை புனரமைக்கப்படாததே இதற்கு காரணம் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், ஜா-எல ஸ்வர்ணஹங்ஸ பொடி எல பாலம் நேற்று மாலை உடைந்து விழுந்துள்ளதுடன், ஜா-எல – கம்பஹா பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பாதிப்பு விபரங்கள்: தற்போதைய சீரற்ற வானிலையினால் இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை உட்பட 8 மாவட்டங்களில் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,731 பேர் 18 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 836 வீடுகள் பகுதியளவிலும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வானிலை அதிகாரியின் முக்கிய அறிவிப்பு:
இன்றைய மற்றும் நாளைய தினம் சாதாரண வானிலையே நிலவும் எனத் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி கசுன் பெஸ்குவல், மே 26, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி முழுமையாக நிலைபெறுவதால் தென்மேற்கு பிராந்தியத்தில் மீண்டும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
