டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை: காவல்துறை மறுப்பு!
டிக்கோயா: ஹட்டன் – டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் பகிரப்பட்டு வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், திடீர் சுகயீனம் காரணமாக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்பில் இருந்தபோதிலும், அதிகாரிகளின் கவனத்தை திசைதிருப்பி சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியிருந்தார்.
இந்த நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை காவல்துறை முற்றாக மறுத்துள்ளது. தப்பியோடிய சந்தேக நபரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) டிக்கோயா பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வசித்துவந்த முதிய தம்பதியினர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரே தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
