ஈரான் மீதான தாக்குதல் ரத்து: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!
ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் விலைகள் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன.
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த கச்சா எண்ணெய் விலை, இந்த புதிய சூழலால் இன்று 90 டொலர் என்ற எல்லைக்குக் கீழ் சரிந்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக, உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையமான ‘ஹோர்முஸ் நீரிணையை’ ஈரான் மூடியது. இந்த புவிசார் அரசியல் நெருக்கடியால், கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வந்தது. குறிப்பாக நேற்று ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 95.40 டொலர் வரையிலும், WTI கச்சா எண்ணெய் 92.63 டொலர் வரையிலும் உச்சத்தைத் தொட்டிருந்தது.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான இராணுவத் தாக்குதல் திட்டங்களை ரத்து செய்வதாகவும், போர் பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்தது உலக சந்தையில் முதலீட்டாளர்களிடையே ஒரு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுமுகமான சூழல் காரணமாகவே, கச்சா எண்ணெய் விலை குறுகிய காலத்திற்குள் மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நிச்சயமற்ற தன்மை நீடிப்பதாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முழுமை பெறாததாலும், சந்தையில் தற்போதும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
