காணியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறிகள் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கிய ஊடகவியலாளர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில் தாக்கப்பட்ட சம்பவம் கொட்டகலை பகுதியில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திம்புல்ல – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை, கொமர்சல் (Commercial) நேத்ரா பிளேஸ் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பகுதியில் நபர் ஒருவர் குத்தகை அடிப்படையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். அவர் தனது விவசாயக் காணியில் வனவிலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமான முறையில் கம்பிப் பொறிகளை அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தொழில் நிமித்தமாகக் கொழும்பில் இருந்த வேளையில், அவரது விவசாயக் காணியின் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் அவரது வளர்ப்பு நாய் சிக்கியுள்ளது. இதனையடுத்து, விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நபரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஊடகவியலாளர், அப்பகுதியில் சுற்றித் திரியும் வனவிலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்தச் சட்டவிரோதப் பொறிகளை அகற்றுமாறு கோரியுள்ளார்.
எனினும், அதற்குப் பதிலளித்த அந்த நபர்,
“கம்பி வலைகள் எனது காணிக்குள் அமைக்கப்பட்டுள்ளன; இதில் எவரும் தலையிடத் தேவையில்லை”
எனக் கூறியதுடன், ஊடகவியலாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 10 ஆம் திகதி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் இது குறித்து ஊடகவியலாளர் தகவல் வழங்கியுள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடித் தேடுதலில், பல சட்டவிரோதக் கம்பிப் பொறிகளை மீட்டதுடன், சம்பந்தப்பட்ட நபரை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
இந்நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்திற்குத் தகவல் வழங்கியமைக்குப் பழிவாங்கும் நோக்கில், மல்லிகைப்பூ சந்திப் பகுதியில் வைத்து குறித்த நபர் தன்னைத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இயற்கைச் சூழலையும் அப்பாவி உயிரினங்களையும் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு செயற்பட்ட ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது கவலைக்குரிய விடயமாகும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான சம்பவங்களில் உரிய நடவடிக்கைகள் தாமதமாகவோ அல்லது அலட்சியமாகவோ மேற்கொள்ளப்படுமானால், எதிர்காலத்தில் சமூக நலனுக்காகவும், சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர்கள் அச்சமடையக்கூடிய சூழல் உருவாகும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்குகளின் உயிர் பாதுகாப்பு மற்றும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் மற்றும் ஊடக அமைப்புகள் பலமாக வலியுறுத்தியுள்ளன.
