தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (17) மாலை காரில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த பெண்ணின் காதலன் என நம்பப்படும் நபரே இது குறித்து தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த ஜூன் 3 ஆம் திகதி முதல் ஜூன் 16 ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி (Hotel) ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
இதற்கிடையில், இந்த மர்ம மரணத்தின் பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முக்கிய ஆதாரம் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. நுவரெலியாவில் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து, மயங்கிய நிலையில் அல்லது உயிரிழந்த நிலையில் உள்ள அந்தப் பெண்ணை அவரது காதலன் என நம்பப்படும் நபர் கைகளில் தூக்கிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் CCTV கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியவரும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா மற்றும் தெல்தெனிய பொலிஸார் இணைந்து பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
