நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை விரைவாக நவீனமயமாக்கி, மாணவர்களுக்குச் சாதகமான கல்விச் சூழலை உருவாக்குவதற்காக 1,008 மில்லியன் ரூபாய் (1.008 பில்லியன்) விசேட நிதி ஒதுக்கீட்டிற்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட திட்ட முன்மொழிவுக்கே இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் தற்போதுள்ள விடுதிகளில் 126 விடுதிக் கட்டிடங்கள் போதிய பராமரிப்பின்றி, மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாக அரசாங்கம் கண்டறிந்துள்ளது. இதனால் அங்கு தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அவலநிலைக்கு விரைவான தீர்வுகளை வழங்கி, விடுதி மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புமிக்க சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இதற்கமைய, அடையாளம் காணப்பட்டுள்ள 126 பாடசாலை விடுதிகளிலும் காணப்படும் பௌதீகக் குறைபாடுகள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் (2026 – 2028) ஆகிய 2 ஆண்டு காலப்பகுதிக்குள் விரைவாக நவீனமயமாக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் பெருமளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
